-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வருவது எப்படி?

     (யார் கிறிஸ்துவினுடையவர்கள்?  தொடர்ச்சி…)

            கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. எப்படி? எப்பொழுது? கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும் என்கிற மூன்று விதங்களை நாம் தியானிக்கப் போகிறோம்.

            கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். (கலாத்தியர் 5:24) நன்றாய் கவனியுங்கள், இப்பொழுது நாம் பிசாசினுடையவர்கள் அல்ல. பிசாசினுடையவர்களாய் இருந்த நாம் பாவத்திலிருந்து விடுதலை ஆக்கப்பட்டோம். ஞானஸ்நானத்தினால் உடன்படிக்கை செய்தோம். கிறிஸ்துவினுடையவர்கள் ஆனோம். இப்பொழுது அவருடைய குணாதிசயம் நமக்குள் வரவேண்டும் என்றால், அவருடைய ஆவி நமக்குள் வரவேண்டும் என்றால் முதலாவது நம்முடைய மாம்சத்தையும், அதினுடைய ஆசை இச்சைகளையும் கண்டிப்பாய் சிலுவையில் அறைய வேண்டும். வேதம் சிலுவையில் அறைவார்கள் என்று எழுதவில்லை, அறைந்திருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறது. எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ, அவர்களே தேவனுடைய புத்திரர். எனவே நாம் மாம்சத்தின்படி நடத்தப்பட முடியாது.. பழைய காலத்தில் நம்முடைய மனதும் மாம்சமும் விரும்பினபடி நடந்தோம். ஆனால் இப்பொழுது அப்படி நடக்க முடியாது. ஏனென்றால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாய் மாறிவிட்டோம். எனவே நம்முடைய ஆசாபாசங்களைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள் உங்கள் மாம்சம் எதையெல்லாம் ஆசைப்படுகிறது. எதையெல்லாம் இச்சிக்கிறது. இவைகளையெல்லாம் சிலுவையில் அறைந்திருந்தால்தான் நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.


            ஆண்டவரின் ஆசை உங்களின் ஆசையாய் இருந்தால் அது மிகவும் சரி. ஆண்டவரின் ஆசைக்கு உங்களின் ஆசை மாறாய் போகிறதென்றால், சிலுவையில் அறைந்துவிடுங்கள். ஏன்? ஒரு மனைவி கணவனுக்குத் துரோகம் செய்கிறாள் என்றால் அவள் தன் புருஷனைவிட தனக்கென்று ஒரு ஆசை வைத்துவிட்டாள். சகோதரனே, சகோதரியே நாம் ஆண்டவரின் விருப்பப்படி வாழ வேண்டியவர்கள். ஆனால் உன் விருப்பப்படி வாழ்வாய் என்றால் நீ ஆண்டவருக்குத் துரோகியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உதாரணமாய்ச் சொல்கிறேன்: என் மனைவிக்கு அங்கே போகவேண்டும், இங்கே போகவேண்டும், அதை வாங்கவேண்டும், இதை வாங்கவேண்டும் என்று ஆசை இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், என் மனைவி என்னதான் செய்யவேண்டும்? தன் ஆசை விருப்பங்களை எல்லாம் தியாகம்பண்ணித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் எனக்கு அது பிடிக்கவில்லை. அது போல தேவனுக்குப் பிடிக்காத காரியங்களை சாத்தான் நமக்குள்ளே தூண்டும்போது, இல்லை இதை நான் சிலுவையில் அறைந்துவிட்டேன் என்று நாம் சொல்லவேண்டும்.

            


            நான் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். சவுல் இறந்த பிறகு தாவீது இராஜாவானான். இராஜாவாக்கப்பட்ட தாவீது தன் சொந்த மகனால் விரட்டப்பட்டபோது அப்சலோம் இராஜ்ய பாரத்தைப் பிடித்துக்கொண்டதால் தாவீது விரட்டப்பட்டான். அப்பொழுது சவுலின் சொந்தக்காரனான சீமேயி என்பவன் தாவீதை தூஷிக்கிறான். மண்ணை வாரி தூற்றிக்கொண்டு பேலியாளின் மனுஷனே தொலைந்து போ, தொலைந்து போ என தூற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த தாவீதின் படைத்தளபதி அபிசாய் தாவீதிடம் இந்த செத்த நாயின் தலையை வாங்கிப்போடட்டுமா என்று கேட்டபோது, தாவீது வேண்டாம் கர்த்தர் இதை அனுமதித்திருக்கிறார். என் கர்ப்பப் பிறப்பே எதிராய் எழும்பும் போது, இவனை நீ விட்டு விடு என்று சொல்கிறான்.

            நாமாக இருந்தால் என்ன சொல்லியிருப்போம். நான் முன்னால் போகிறேன் நீ கொன்றுவிடு என்று சொல்லியிருப்போம். நமது மாம்சம் இப்படி செயல்பட்டிருக்கும். ஆனால் தாவீது மாம்சத்தை அறைந்தபடியால் அப்படிச் செய்யவில்லை.  அதுபோல நாமும் நமது மாம்சமும் மனதும் விரும்புகிறபடி வாழாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான், கிறிஸ்துவின் ஆவி நமக்குள் வரும்.

            இன்றைக்கு 90 சதவீதம் விவாகரத்தில் அதிகமான காரணம் மனைவி கணவனோடு ஒத்துப்போக முடியாததே. அப்படியே நான் கிறிஸ்தவன், நான் இரட்சிக்கப்பட்டவன், ஆனால் என் விருப்பப்படிதான் வாழுவேன் என்று வாழ்ந்துகொண்டிருப்பதால்தான்.  அநேக விசுவாசிகளும் ஊழியர்களும் கிறிஸ்துவோடு ஒத்துப்போக முடியாமல் அவருக்குத் துரோகம் செய்துவிட்டனர். தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறையமுடியாததால் தேவனைவிட்டு விலகிப்போய்விட்டனர். இயேசுவை வேண்டுமானால் மறுபடி சிலுவையில் அறைகிறார்களே தவிர, தங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு எத்தனை பெண்கள் சொந்த புருஷனுக்குத் துரோகம் செய்து, அதைப் பிள்ளை பார்த்துவிட்டதினால் பிள்ளையைக் கொலை செய்து, பின் கள்ளக்காதலனை வைத்தே புருஷனையும் கொலை செய்தவர்களும் உண்டு. காரணம் என்ன தெரியுமா? தன் சொந்தப் புருஷனை நேசிக்காதபடி தன் மாம்ச இச்சையின்படி நடந்ததினால் வந்த விபரீதங்கள் இவை.

        " இதே போல் தன் சொந்த இச்சைகளுக்காக கிறிஸ்துவை கொலை செய்பவர்கள் இன்றைக்கு ஏராளம்."


            ஆனால் நாம் எனக்கென்று ஒரு ஆசை வேண்டாம் என் கர்த்தரின் ஆசையே எனது ஆசை என்று நம் ஆசையை  சிலுவையில் அறைந்தால் நாம் கிறிஸ்துவினுடையவர்கள். அவர் ஆவி நமக்குள் வரும். பவுல் அழகாய் சொல்கிறார் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; (கலா 2:20) இப்படி தன்னுடைய ஆசையையெல்லாம் சிலுவையில் அறைந்து நான் அல்ல என் ஆசை அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்று வாழ்ந்ததினால்தான் எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது என்று சொல்ல முடிந்தது. உள்ளே இருப்பது கிறிஸ்து எனவே வெளியே வெளிப்படுவதும் கிறிஸ்து. அவரைப் போலவே வாழ்ந்துவிட்டான். எனவே முதலாவதாக கிறிஸ்துவின் ஆவி உடையவர்களாய் மாற வேண்டும் என்றால் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைய வேண்டும்.

             இரண்டாவதாக வேதம் சொல்கிறது,                                                                                          அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே   ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரி 6:17)”

            கர்த்தரோடு இசைந்த ஒரு வாழ்க்கை: அப்படியென்றால் அவர் என்ன சொன்னாலும், என்ன வசனம் சொன்னாலும் ஆம், ஆம் என்று அவரோடு இசைந்துவிட வேண்டும். கணவனோடுகூட இணைந்து இருக்கும் மனைவி என்ன செய்வாளென்றால் கணவன் சொன்னபடி எல்லாம் சரி சரி என்று செய்வதால் அவனுடன் இசைந்து ஒரே ஆவி உடையவளாய் மாறிவிடுகிறாள். அப்படியே நாமும் ஆண்டவர் என்ன வசனம் சொன்னாலும் சரி சரி என்று முறுமுறுக்காமல் எல்லாவற்றையும் செய்வோமானால் அவருடன் இசைந்து அவருடைய ஆவி நமக்குள் வந்துவிடும் அவரைப்போல் மாறிவிடுவோம். எனவே வேதத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

            ஆண்டவர் ஒரு வசனத்தின்படி வாழச் சொல்லும்போது நான் தேவனோடுகூட ஒருமித்துப் போகிறதா? அல்லது அவர் என்னோடுகூட ஒருமித்து வருவதா? அவருடைய குணம் எனக்கு வேண்டும் என்றால், நான்தான் அவரோடுகூட ஒருமித்துப் போகவேண்டும். இது கடினம் இது என்னால் முடியாது என்று சொல்ல கூடாது. அப்படி சொன்னால் அவரோடு இசைந்துபோகவில்லை என்று அர்த்தம். பிதா என்ன சொன்னாரோ அதையே சொன்னவர் இயேசு, பிதா என்ன செய்தாரோ அதையே செய்தவர் இயேசு. ஏனென்றால் இயேசு பிதாவுக்கு உரியவராய் இருந்ததினால் அப்படி வாழ்ந்தார். அதுபோல நீங்களும் நானும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் ஆகவே அவர் என்ன சொன்னாரோ அப்படியே வாழவேண்டும்.


            வேதம் சொல்கிறது

            இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தால்ஒழிய ஒருமித்து நடந்து போவார்களோ? (ஆமோஸ் 3:3)

            (1 சாமு 18:1) ல் வேதம் சொல்கிறது அவன் சவுலோடே பேசி முடிந்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். நன்றாய் கவனியுங்கள் யோனத்தான் இராஜாவின் மகன். ஆனால் தாவீதோ சாதாரண ஆடு மேய்ப்பவன். ஆனாலும் கூட தாவீதோடு கூட இசையவேண்டும் என்பதனால் அவன் இளவரசன் என்கிற ஸ்தானத்தை பெரிதாக நினைக்காமல், தன்னுடைய ஆசை பெரியதல்ல என்று தன்னுடைய காரியங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டான், தாவீதோடு இசையவேண்டும் என்று விரும்புகிறான்.


            யோனத்தான் தாவீதை தன் உயிரைப்போல சிநேகித்தான். இதுபோல நீங்களும் நானும் இயேசுவோடு இசைந்து போகவேண்டும் என்றால், அவரை உயிரைப்போல நேசிக்க வேன்டும்.

            பாடல் மட்டும் பாடிவிடுகிறோம் என் உயிரான, உயிரான, உயிரான இயேசு என்று. ஆனால் உண்மையில் இயேசுதான் உங்கள் உயிரா? என்று கேட்டால், என் பிள்ளைதான் எனக்கு உயிர், என் மனைவிதான் எனக்கு உயிர் என்று வாழ்ந்துவிட்டு, பாடல் மட்டும் உயிரான இயேசுஇப்படித்தான் இன்றைக்கு அநேகர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

            உண்மையில் இயேசுதான் உயிர் என்றால், அவர்கள் எந்த வசனத்துக்கும் கீழ்ப்படிவார்கள். ஏனென்றால் கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம். கணவன் தடுத்தாலும், மனைவி தடுத்தாலும், எந்த மனுஷன் தடுத்தாலும் எனக்கு இயேசுதான் உயிர். அவர் வசனப்படிதான் வாழுவேன் என்பவர்கள்தான் அவரோடு இசைந்தவர்கள்.

            ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நான் ஒரு பணக்காரன் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று எனக்கு ஒரு வியாதி வந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். என் மனைவி சொத்து, சுகம், நகை, நட்டு  எல்லாவற்றையும் விற்று மருத்துவமனையில் செலவழித்தபின்பு கடைசியாக ஒரே ஒரு டெஸ்ட் எடுக்கவேண்டியுள்ளது. அது 5000 ரூபாய்தான் ஆகும், இந்த டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டால் ஒருவேளை உயிரடையப் பண்ணலாம்  என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அப்போது என் மனைவி என்னிடம் வந்து ஆஸ்தியெல்லாம் செலவழித்துவிட்டேன். இனி ஒன்றுமே இல்லை. நான் செய்வதென்று தெரியவில்லை. எப்படியாவது உங்கள் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்று கேட்டபோது நான் என் மனைவியிடம் உன்னிடம் கழுத்தில் இருக்கிற அந்த ஒரே ஒரு செயினை விற்றால் 5000 ரூபாய் கிடைக்கும், என்னை காப்பாற்றிவிடு என்று சொல்லும்போது, என் மனைவி என்னிடம் அது மட்டும் என்னால் முடியாது. நீங்கள் தான் என்னுடைய உயிர் ஆனால் செயினை தரமாட்டேன் என்று சொன்னால் உண்மையில் என்னை உயிராய் நேசிக்கவில்லை. என்னை உயிராக நேசித்திருந்தால் அந்த செயினை துச்சம் என தூக்கி எறிய முடியும். இதைப் போலத்தான் அநேகர்என் ஜீவனாகிய கிறிஸ்துஎன்று சொன்னாலும், அவருக்கு கீழ்ப்படிவதில்லை. எனவே அவரோடு இசையமுடியவில்லை. யோனத்தானுடைய உயிர் தாவீது. எனவே அவரோடு கூட இசைந்துபோனான். நமக்கும் கிறிஸ்து உயிராய் இருந்தால் மாத்திரமே இசைந்துபோக முடியும். எனவே வசனத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் இயேசுவை துச்சமாய் நினைப்பவர்களே. ஆனால் நீங்களும் நானும் கணவன் தடுத்தாலும், மனைவி தடுத்தாலும், உறவினர் தடுத்தாலும், கௌரவம் தடுத்தாலும் இவர்களல்ல, கிறிஸ்துவே எனக்கு உயிர், அவருக்கே கீழ்ப்படிவேன் என வாழ்ந்தால், அவரோடு இசைந்துவிடுவோம்.


            மூன்றாவதாக கிறிஸ்துவின் ஆவி நமக்குள் எப்போது வருமென்று வேதம் சொல்லுகிறது என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்” (நீதி 1:23)

            அப்படியென்றால் நாம் தேவன் விரும்பாத காரியத்தைச் செய்தாலோ அல்லது தேவன் விரும்புகிற காரியத்தைச் செய்யாமல்போனாலோ அவர் கடிந்துகொள்வார். நம்முடைய வாழ்க்கையிலே, குடும்பத்திலே தேவன் நம்மைக் கடிந்துகொண்டு சிட்சிக்கும் சூழ்நிலைகள் வரலாம். இது ஏன் என்றால் அவருடைய ஆவியை நமக்குள் வைப்பதற்காக. ஆனால் என்னைத் தான் போதகர் திட்டுகிறார், பேசுகிறார் என்று முறுமுறுக்காமல் இந்த கடிந்து கொள்ளுதல் அவருடைய ஆவியை எனக்குள் வைப்பதற்காகவே என்று அறிந்துகொள்ள வேண்டும். கர்த்தர் நேசிக்கிற புத்திரன் எவனோ அவனைத்தான் கடிந்துகொண்டு சிட்சிக்கிறார். எனவே தேவன் உன்மேல் அன்பாய் இருப்பதினால்தான் கடிந்துகொள்கிறார். எனவே ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு.

            பள்ளியில் படிக்கிற ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்றுத்தருகிறார். அவனுக்கு ஒன்றுமே ஏறவில்லை. எனவே அடித்துக் கற்றுத்தருகிறார். ஆனாலும் முடியவில்லை. பின்னர் அவன் அவ்வளவுதான் என விட்டுவிடுவார். ஆனால் 100 க்கு 98 , 99 மார்க் எடுக்கும் மாணவன் இப்பொழுது 50 மார்க் தான் எடுக்கிறான் என்றால் அவனை அதிகமாய் கடிந்துகொள்வார். 10 மார்க், 15 மார்க் எடுத்தவனைச் சிலமுறை சொல்லிவிட்டு விட்டுவிடுவார். ஆனால் 100 மார்க் எடுத்தவனையோ மிக அதிகமாய் கடிந்துகொள்வார் காரணம் மறுபடி எப்படியாவது 100 மார்க் எடுக்க வைப்பதற்காக. ஏனென்றால் அவனை நேசிப்பதினால்.


            இது போலவே தேவன் உன்னை அதிகமாய் நேசிப்பதினால் போதனையில் சிட்சிக்கலாம், குடும்பத்தில் சிட்சிக்கலாம். அல்லது எந்தவிதத்திலும் உன்னை சிட்சிக்கலாம். அப்படி சிட்சிக்கப்படும்போது அதனை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பும்போது கிறிஸ்துவின் ஆவியை உனக்குள் வைக்கிறார்

            ஆசிரியர் தனது விருப்பத்தினை மாணவனுக்குள் நிறைவேற்றிவிட வேண்டும் என்பதற்காகவே கண்டிக்கிறதுபோல தேவனும் அவரது ஆவியை உனக்குள் வைப்பதற்காகவே சிட்சிக்கிறார். எனவே இதை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரிடம் நான் எதிலே கீழ்ப்படிய வேண்டும், எதிலே தவறிவிட்டேன் எனக் கேட்டு உன் வாழ்க்கையை மாற்றிக்கொள்.

            யோவான் ஒரு திவ்ய சுபாவமுள்ளவனாய் மாறிவிட்டான். எப்படி அவனால் மாற முடிந்தது? அவனுக்குள் இயேசுவைப்போல் மாறவேண்டும் என்ற ஆசை இருந்தது எனவே மாறிவிட்டான். எனவே உங்களுக்குள்ளும் ஆசை இருந்தால் மாத்திரமே அவரைப் போல மாறமுடியும். என்னால் முடியாது இதெல்லாம் நடக்காது என்று நினைத்தால் ஒருநாளும் முடியாது. பிதாவைப் போல் கிறிஸ்து வாழ்ந்தார். நான் கிறிஸ்துவைப்போல வாழ்வேன், எனக்குள் அந்த ஆவி வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கட்டாயமாய் நீதிமான் விரும்புகிற காரியத்தை தேவன் உங்களுக்குக் கொடுப்பார்,

“ மறுபடியும்  மறுபடியும்  கிறிஸ்துவைச்  சிலுவையில்  அறையாமல்,

உன்  மாம்சத்தையும்  இச்சையையும்  சிலுவையில்  அறைந்துவிட்டால்,

உலகத்தோடும் அதில் உள்ளவைகளோடும் இணைந்துவிடாமல்,

உன்னதரோடு  உறவாடுவதில்  உன் ஆவி இசைந்துவிட்டால்,

கடிந்துகொண்டாலும்    பின்வாங்கிவிடாமல்

கொன்றுபோட்டாலும் நன்மைக்கே என நம்பிவிட்டால்

நீயே

கிறிஸ்துவின் ஆவியை உடையவன் ”

கர்த்தரின் வேலைக்காரன்.

P. அற்புதராஜ் சாமுவேல்

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் ஐயா இந்த பதிவை என்னுடைய வாட்ஸ் அப் நம்பர் அனுப்பவும் 9566437384

    பதிலளிநீக்கு

உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்