-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மேரி ஸ்லெஸர் - மிஷனரி வாழ்க்கை வரலாறு (Mary Slessor - Missionary Biography Tamil)

மழை பெய்து கொண்டு இருந்தது. விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. தெருவின் வழியாக பதினாறு வயது நிரம்பிய ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள். முரட்டுக் குணம் உடைய இளைஞர் கூட்டம் ஒன்று அவளைப் பின்தொடர்ந்தது. அவர்கள் அவளைச் சூழ்ந்து கொள்ளும்வரை அவள் அதனைக் கவனிக்கவில்லை. அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒரு நீண்ட கயிற்றில் சில ஈயத்துண்டுகள், தகடுகளைக் கட்டி அதைத் தலைக்கு மேலாகச் சுழற்றியபடி அவள் அருகில் சென்றது மட்டுமல்லாமல் , " நீ உன்னுடைய ஞாயிறு பள்ளியினை நிறுத்திவிட்டு எங்களைச் சும்மா விடும் வரைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறோம் " என்று கூறினான். உறுதியான தீர்மானத்தோடு மேரி தனது நிலையிலே நின்றுகொண்டு "நீ விரும்புவதைச் செய்யலாம்" என்றாள். அவள் அருகே மிகவும் நெருங்கி, அந்த ஈயத்துண்டுகளை மிகவும் வேகமாகச் சுழற்றினான். ஆனால் மேரி தைரியமாக அவ்விடத்திலேயே நகராமல் நின்றாள். கடவுளின் வேலையைச் செய்வதால் அவர் தன்னைக் காத்துக் கொள்வார் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது.

அந்தப்பக்கத்தில் உள்ள சேரியிலே உள்ள சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அவள் வேதபாட வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தாள். அங்குள்ள முரட்டுத்தனமான பையன்களுக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே, இந்த வகுப்புகளைச் சீர்குலைக்க வேண்டும் என்று தீர்மானித்தே இவ்வாறு இடையூறு  செய்தனர்.

ஆனால், மேரி தைரியமாக அசையாமல் நின்றதைக் கண்டபோது, அவர்களுக்கு அவள் மீது இருந்த வெறுப்பு நீங்கி அவளது தைரியத்தினாலே அவர்கள் கவரப்பட்டார்கள். ஆகவே, அந்தக் குழு முழுவதும் அன்று முதல் ஞாயிறு வகுப்பிற்குச் செல்ல ஆரம்பித்தது .

அதன் விளைவாக அந்தக் கூட்டத்தின் தலைவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் கண்டான்.

மேரி ஸ்லெஸர்

சிறுமியான மேரி

மேற்கூறிய நிகழ்ச்சியில் சொல்லப்பட்டிருக்கும் சிறுமியான மேரி ஸ்லெஸர், 1848-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள் ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தாள். அவளுடைய பெற்றோர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த படியினாலே பதினோரு வயது நிரம்பியவளாகும் போதே தன்னுடைய குடும்பத்தைத் தாங்குவதற்காக அருகில் இருந்த தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அவள் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு, அதன்பிறகு ஓர் இரவு பாடசாலைக்குச் சென்று படித்து வந்தாள். ஒரு புத்தகத்தைத் தன்னோடு எடுத்துச் செல்வாள். வேலை செய்யும் போதும் சிலசமயம் தன் பாடங்களைப் படிப்பாள். இவ்விதமாகவே தன்னுடைய வேதாகமத்தையும் எடுத்துச் சென்று படிப்பாள். அந்த நாட்களில் கர்த்தருடைய பிரசன்னம் மிக அருகில் இருந்ததை அவள் உணர்ந்தாள். அதுமட்டும் அல்ல, அவ்வப்போது ஆண்டவர் அவளோடு பேசுவதையும் அவள் தெளிவாக உணர்ந்தாள். வயதான ஓர் அம்மாள் கூறிய செய்தியின் மூலமாக ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள்.

மேரி ஸ்லெஸர்- இளமைப் பருவம்

மேலும் ஆண்டவரை அதிகமாக நேசித்தாள். யோவான் எழுதிய நற்செய்தி நூலை மிகவும் பிரியமாக வாசிப்பது உண்டு. பல சமயங்களில் தனது தூக்கத்தை மறந்து அவள் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பாள்.

அவருடைய தந்தை ஒரு குடிகாரனாக இருந்த படியினால் குடும்ப வாழ்க்கை என்பது சுமூகமாக இல்லை. குடிவெறியிலே வீட்டிற்கு வரும் தகப்பன் அடிக்கடி தனது தாயாரை அடித்துத் துன்புறுத்துவதைக் கண்டாள். அந்த வேளைகளில் மேரி கண்ணீரோடும், துயரத்தோடும் பயத்திலே ஆதரவு அற்ற நிலையிலே வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டு இருளிலே அலைய நேர்ந்தது. என்றாலும் இவ்விதமான எல்லா அனுபவங்களும், அவளுடைய எதிர்கால வாழ்க்கையின் அனுபவங்களுக்கும், வாழ்க்கையின் வேலைகளுக்கும் முன்னோடியாக அவளைப் பயிற்றுவித்தன. மேரியின் தாயார் மிகவும் பக்தி நிறைந்த ஒரு கிறிஸ்தவப் பெண். அடிக்கடி இந்த அம்மையார் தன்னுடைய பிள்ளைகளை அழைத்து இயேசு கிறிஸ்துவின் அன்பையும் , ஆப்பிரிக்காவில் உள்ள பிள்ளைகளுக்குக் கிறிஸ்துவின் அன்பைப் பற்றித் தெரியாது என்பதையும் எடுத்துச் சொல்வார்கள். தன்னுடைய தாயிடம் இருந்துதான் மிஷனெரி பணிக்கான ஓர் ஆழ்ந்த பாரத்தை மேரி பெற்றுக்கொண்டாள்.

அவள் தன் தாயாரைப் பார்த்து "அம்மா நான் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஒரு மிஷனெரியாகச் செல்வேன்" என்று அடிக்கடி சொல்வது உண்டு. இந்தப் பிள்ளைகள் தங்கள் விளையாட்டு வேளையில் கூட பிரசங்கம் செய்து விளையாடுவது உண்டு. தனது மனதில் ஆப்பிரிக்கப் பிள்ளைகளாகப் பலரை நினைத்துக் கொண்டு அவர்களுக்குச் சுவிசேஷத்தை மேரி சொல்வது உண்டு. இந்த பிள்ளைகள் ஆப்பிரிக்காவைப் பற்றித் தெளிவான விபரங்களை அறிந்திருந்தபடியினால், அவர்களுடைய மூத்த சகோதரனான இராபட் மிஷனெரியாக ஆப்பிரிக்கா செல்வார் என்று தாயாரும் எதிர்பார்த்திருந்தார்கள் .

ஆனால் அவ்விதமாக நடைபெறவில்லை. மேரி 14 வயதாக இருக்கும்போது அவளுடைய தகப்பனால் ராபர்ட் உட்பட அவளது இரண்டு சகோதரர்களும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தார்கள். குடும்பத்தை முழுவதுமாகப் பராமரிக்கும் பாரம் மேரியின்மேல் விழுந்தது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தன்னையே தியாகம் செய்யும் வாழ்க்கையினை அவள் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கடுமையான துன்பங்களின் மூலமாக மேரி முன்னிலும் அதிகமான தைரியமும், பொறுமையும் உடையவளானாள்.

ஆப்பிரிக்காவிற்கு அழைப்பு

தான் ஒரு மிஷனெரியாவதற்கு முன்னதாகவே மேரி முழு மனதோடு ஆண்டவருக்காகத் தன் சொந்தப் பட்டணத்தில் சாட்சியாய் விளங்கினாள். நாம் ஆண்டவருக்குப் பணிபுரிய தூர இடங்களுக்குச் செல்லுமுன், நம்முடைய சொந்த ஊரிலும் இனத்தாரிடத்திலும் ஆண்டவருக்கு சாட்சியாக இருக்க வேண்டும். மேரி ஒரு நாளைக்குப் பத்துமணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்வாள் என்றாலும், தன்னுடைய ஒய்வு நேரத்திலெல்லாம் கடவுளுக்கு எவ்வளவு சிறப்பாக பணிபுரிய முடியுமோ அவ்வளவு சிறப்பாகப் பணிபுரிவாள். இவ்விதமாக ஆண்டுகள் கடந்தன. ஆனால் அந்த ஆண்டுகளில், ஆப்பிரிக்காவின் காடுகள், அவற்றில் உள்ள குடிசைகள் எல்லாம் எப்போதுமே அவள் மனக்கண்முன் காட்சி அளித்துக் கொண்டே இருந்தன. ஆப்பிரிக்காவில் மிஷனெரியாகப் பணியாற்றிய டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிலேயே இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி ஸ்காட்லாந்து தேசத்தில் பரவியது.

அந்த இடத்திற்கு இனி யார் சென்று அந்தப் பணியைத் தொடர்வார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த அறைகூவல் ஆப்பிரிக்காவிற்குச் செல்வதற்கான மேரியின் அழைப்பினை உறுதி செய்தது. ஆப்பிரிக்கா செல்வதற்கு இப்படி ஓர் அழைப்பு இருப்பதை மேரி தன் தாயாரிடம் கூறினாள். அவளுடைய தாயார் மகிழ்ச்சியாக சம்மதித்தார். உடனே மேரி மிஷனெரி சங்கத்திற்கு ஓர் கடிதம் எழுதினாள். அவளது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயும், அவள் ஆப்பிரிக்காவிலே கலாபார் என்ற இடத்திற்கு மிஷனெரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் மிஷனெரி சங்கத்திலிருந்து பதில் வந்தது .

1876-ஆம் ஆண்டு மேரிஸ்லெஸர்கப்பலின் மேல் தளத்தில் நின்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கையசைத்து விடைபெற்று மிஷனெரியாக  ஆப்பிரிக்கா புறப்பட்டாள். அந்தக் கப்பலில் விஸ்கி, மதுபானம் அடங்கிய பெட்டிகள் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்ட மேரி, "ஐயோ! ஆப்பிரிக்காவிற்குப் பெட்டி பெட்டியாக மதுபானப் பொருட்கள் செல்லுகின்றன. ஆனால் அங்கு செல்ல ஒரே ஒரு மிஷனெரி தானா?" என்று ஆச்சரியத்தோடு கூறினாள். கடல் பிரயாணத்தின்போது அவளோடு பிரயாணம் செய்த ஒருவர் ஆப்பிரிக்காவைப் பற்றி அதிகமான குறிப்புகளை அவளுக்குக் கொடுத்தார். எவ்விதமாக ஆப்பிரிக்கா அடர்த்தியான காடுகளினால் மூடப்பட்டு இருக்கிறது, எந்த ஒரு வெள்ளையனுமே பார்த்திராத வேகமான ஆறுகள் ஓடுகின்றன. காட்டாறுகள் வேகமாக எழும்பிக் குடிசைகளையும், மரங்களையும் வேரோடு அடித்துக் கொண்டு செல்கின்றன என்பதையும் விளக்கினார். அதுமட்டுமின்றி அடர்த்தியான காடுகளில் பெரும் யானைகள், சிறுத்தைகள், புலிகள், பயங்கரமான பாம்புகள் எல்லாம் இருக்கின்றன என்றும் நதிகளில் நீர்யானைகள், முதலைகள் ஏராளமாய் இருக்கின்றன என்றும் விவரித்தார்.

ஆப்பிரிக்காவில் மேரி

மேரி ஸ்லெஸர் நைஜிரியா குடும்பத்துடன்

ஆப்பிரிக்காவில் டு யூக் டவுன் என்ற கடற்கரைப் பட்டணத்தை மேரி அடைந்து அங்கு நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தாள். அந்த நாட்டு மொழியினைக் கற்றுக் கொள்வதற்கும் அந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் அது அவளுக்குப் பெரும் உதவியாக இருந்தது. அந்த நாட்டில் உள்ள ஆப்பிரிக்கச் சிறுவர் சிறுமியருடன் நன்முறையில் பழக ஆரம்பித்தாள். அவர்களோடு மிகவும் நட்புடன் பழகியதால் அவர்களுடைய நல்லெண்ணத்தையும், நல்மதிப்பையும் பெற்றுக் கொண்டாள். ஆனால் அவளுடைய உள்ளத்திலோ ஆப்பிரிக்காவின் காடுகள் நிறைந்த உள் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், அங்கே ஆண்டவரை அறியாத மக்களுக்கு ஆண்டவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் மேலிட்டு இருந்தது.

இருண்ட கண்டம்

ஆப்பிரிக்கா எதனால் "இருண்ட கண்டம்" என்று அழைக்கப்படுகிறது என்பதை வெகுவிரைவில் புரிந்து கொண்டாள் மேரி. அங்கே பாவம், கொடுமை, அசுத்தம் முதலிய தீமைகள் நிறைந்த ஒரு நிலைமை காணப்பட்டது. அடிமை வியாபாரம் தாராளமாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் ஈவிரக்கம் இன்றி பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டு மிருகங்களை காட்டிலும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள் குளங்களிலும், மரங்களிலும் பல வித அசுத்த ஆவிகள் இருக்கிறதாக நினைத்துப் பயந்திருந்தார்கள். வேறு சிறுமலை வாசிகள் சண்டையிடுவதிலும், குடித்து வெறித்துக் கூத்தாடுவதிலும் தங்கள் வாழ்க்கையையும், காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் அதில் பலர் மனிதரைத் தின்னும் நரமாமிச பட்சினிகளாய் இருந்தார்கள். தங்களுடைய தெய்வங்களைப் பிரியப்படுத்துவதற்காக மிருகங்களின் இரத்தத்தைச் சிந்துகிறவர்களாகவும் இருந்தார்கள். ஆப்பிரிக்கத் தலைவன் ஒருவன் இறந்தால் அவனுடைய ஆவிக்குத் துணையாக இருப்பதற்கு அவனுடைய மனைவிகள், பிள்ளைகள் அனைவருடைய தலைகளும் வெட்டப்பட்டவர்களாய் அவனோடுகூடப் புதைக்கப்படுவர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் அவர்கள் செய்த குற்றத்திற்காக நஞ்சைக் குடிக்கச் செய்தல், கொதிக்கும் எண்ணெயில் கையைத் தோய்க்கச் செய்தல் முதலியவை தண்டனையாக இருந்தன. ஏதேனும் ஒரு குடும்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் பிறந்தால் இவை பேய்களினால் வந்தவை என்று அவர்கள் போதிக்கப்பட்டபடியினால் உடனடியாக அந்தக் குழந்தைகளை வெட்டி சிறுத்தைப் புலிகளுக்கு முன்பதாகத் தூக்கி எறிந்து விடுவார்கள். இவ்விதமாக அவர்களைப் பெற்ற தாய்மார்களும் தனியாக வாழ்வதற்காகத் தனியாக காடுகளுக்குள் விரட்டியடிக்கப் படுவார்கள். இவர்களில் ஒருவரும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி ஒருபோதும் அறியவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலையும், மகிழ்ச்சியும் பரிசுத்தமுள்ள வாழ்க்கையும் உண்டு என்பதை அவர்கள் ஒருபோதும் உணரவில்லை.

அம்மா ஸ்லெஸர்

ஒரு தாயாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட மேரி அந்தக் குழந்தைகளுக்கு நேரிடும் நிலையை அறிந்தவளாக வேகமாக அந்தக் குடிசைக்கு ஓடினாள். அங்கே அந்தக் குடிசையில் இருந்த ஒரு மூதாட்டியிடம், அந்தக் குழந்தைகளை அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று கேட்டாள். அந்தக் குழந்தைகளின் முதுகை ஒடித்து அவர்களைப் பக்கத்தில் உள்ள புதரிலே தூக்கி எறியப் போவதாக அக்கிழவி கூறினாள்.

மேரி ஸ்லெஸர்- இரட்டை சகோதரிகளை காப்பாற்றியதற்கான  நினைவுச் சிலை

உடனே மேரி அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்தாள். எப்படியோ அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றாகிய ஆண் குழந்தை, அதன் உறவினர்களால் திருடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டது. ஆனால் மேரி பெண் குழந்தையை மிகவும் பரிவுடனும், கவனத்துடனும் தத்து எடுத்து ஆப்பிரிக்க குடும்பத்தின் தன்னுடைய முதல் மகள் என்று வளர்த்தாள். மேரி அவ்விடத்து மக்களின் குடிசைகளில் வாழ்ந்து, அவர்களின் உணவாகிய மீன், கிழங்கு, பழங்களையே சாப்பிட்டு வந்தாள் .

அந்த மக்களுக்கு உடைகளைத் தயாரித்தும், எழுத படிக்கப் போதிக்கும் ஆசிரியையாகவும், பிணிகளைத் தீர்க்கும் செவிலித்தாயாகவும் சேவை செய்து வந்தாள். அவர்களுக்குள் ஏற்படும் சண்டைகளைத் தீர்த்து வைக்கும் தலைவியாக, தாயன்போடு அவர்களை அரவணைத்து சரியான வாழ்க்கைப் பாதையில் நடத்தினபடியால், அவளை அம்மக்கள் "அம்மா" என்றே அழைத்தனர். "அம்மா ஸ்லெஸர் " என்ற பெயர் நிலைத்து விட்டடது.

மேரி ஸ்லெஸர்- நடுத்தர வயது தோற்றம்

மேரிக்கு ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் செல்ல அதிக ஆவலாய் இருந்தது. உட்பகுதி மக்கள் கடற்பகுதி மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். கொடுமை செய்பவர்களாயும் இருந்தனர். மிஷனெரி சங்கமும் அவளை, உட்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து தடைசெய்திருந்தது. ஆனாலும் அவள் ஓர் இரவு உட்பகுதிக்குள் செல்லப் புறப்பட்டு விட்டாள். தன்னோடு மூன்று ஆப்பிரிக்க ஆண் பிள்ளைகளையும், ஒரு சிறிய பெண்ணையும், ஒரு குழந்தையையும் அழைத்துச் சென்றாள். இருண்ட காடுகளின் வழியே புகுந்து ஓர் உட்பகுதி கிராமத்தை அடைந்தாள்.  அச்சிறிய கிராமத்தில் அவளும் அவளோடு சென்ற மக்களும், மூங்கில்களினால் ஆன ஒரு குடிசையைப் போட்டனர். குடிசைக்குள் போதிய இடம் இல்லாததால் பாத்திரங்களையும், மண்பாண்டங்களையும் குடிசைக்கு வெளியே தொங்கவிட்டனர்.

மேரி ஸ்லெஸரின் திருச்சபை

ஒரு சிறிய ஆலயத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அப்புதிய கிராம மக்களுக்கு மேரி உடைகளைக் கொடுத்து, படிக்கவும், தைக்கவும் கற்றுக் கொடுத்தாள். சமையல் முறைகளையும் படித்துக் கொள்ள உதவி செய்தால். இயேசுவின் இனிய கதைகளைத் தவறாமல் சொல்லி வந்தாள். மேரி பலமுறை அநேக மைல்கள் நடந்து சென்று உட்பகுதி ஆப்பிரிக்க இன மக்களில் எழும்பும் சிறிய சண்டைகளைத் தீர்த்து வைப்பாள். ஒருநாள் அவ்வின அவளுக்கு ஆப்பிரிக்கக் குடும்பத்தில் அநேக பிள்ளைகள் இருப்பதை உணர்ந்தாள்.

மேரி ஸ்லெஸர் மற்றும் அவரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுடன்

இரட்டைக் குழந்தைகள், அநாதைகள், மீட்கப்பட்ட அடிமைகள் என்று பலர் அவளால் பாதுகாக்கப்பட்டிருந்தனர். மேரி தன்னுடைய பல பொறுப்புகளில் ஈடுபட்டு இருக்கும்போது, வாரத்தில் அன்று என்ன கிழமை என்று கூட மறந்து விடுவாள். அவளுடைய நண்பர்கள் செய்யும் ஜெபங்களும், வேண்டுதல்களும் அவளுக்கு உதவியாகவும், ஊழியத்தில் ஊக்கம் கொடுப்பவையாகவும் அமைந்தன.

ஆப்பிரிக்காவின் மேல் மேரியின் கரிசனை

உடல் நலக்குறைவால் மேரி ஸ்காட்லாந்து நாட்டிற்கு திரும்பிப் போக வேண்டியதாக இருந்தது . உடல் நலம் தேறியவுடன் தன்னைத் திரும்ப ஆப்பிரிக்க நாட்டிற்கு அனுப்ப வேண்டு மென்று வேண்டிக்கொண்டாள். தன்னை அனுப்பா விட்டால் "கடலில் நீந்திச் சென்றாவது ஆப்பிரிக்காவை அடைவேன்; ஏனென்றால் கிறிஸ்து இல்லாமல் ஆப்பிரிக்க மக்கள் மரிக்கின்றனர்; நான் போக வேண்டும் " என்று சொல்லி ஆப்பிரிக்க நாட்டைத் திரும்ப வந்தடைந்தாள்.

மேரி ஸ்லெஸர் முதுமை தோற்றத்தில் ஒரு நைஜிரிய கிராமத்தில்

அடிமை வியாபாரம் நடக்கிற இடங்களிலும், நரமாமிசப் பட்சினிகள் என்று அழைப்படுகின்றவர்கள் மத்தியிலும் எவ்வித பயமுமின்றி , கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டாள். முதுமைப் பிராயத்திலும் உற்சாகத்தோடு பணிபுரிந்தாள். சைக்கிளில் பிரயாணம் செய்து கிராமங்களில் சேவை செய்தாள். சில சமயங்களில் அவளை நாற்காலியில் உட்கார வைத்துச் சுமந்து செல்வர். இவ்விதம் மேரி வயது சென்ற நிலைமையிலும், ஆப்பிரிக்க மக்களை நேசித்து அவர்களுக்குப் பணி செய்து வந்தாள்.

பிரிட்டிஷ் அரசாங்கம், மேரியை ஆப்பிரிக்காவின் அந்தப் பகுதிகளுக்கு நீதிபதியாக நியமித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமனம் பெற்றவர் மேரி ஸ்லெஸர் அவர்களே. தனக்குக் கிடைத்த உயர்பதவியை கிறிஸ்துவுக்கு என்று பயன்படுத்தினார்கள். ஆப்பிரிக்க நாட்டுக் குடி மக்களும், அங்கு பணிபுரிந்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் கிறிஸ்துவை ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு நீதிபதியாகப் பணியாற்றினார்கள். அவர்களுடைய திருப்பணியும், ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த சேவையும் அன்று வெளிஉலகிற்கு தோன்றவில்லை. நாகரீகம் அற்ற இடத்தில் மறைந்து கிடந்தது. ஒருவரும் அறியா நிலையில் இருந்த மேரியின் கிறிஸ்தவ பண்புகளும், சேவையும் வெளி உலகு அறிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி மேரி ஸ்லெஸரை கௌரவிக்கவும், சேவைகளைப் பாராட்டவும் முன்வந்தார் . அரசாங்க விருதுகளில் "வெள்ளிச் சிலுவை" என்ற விருதை அவர்களுக்கு அணிவித்துப் பாராட்டி கௌரவித்தார். தம்மை மகிமைப் படுத்திய மகளைக் கிறிஸ்துவும் கனப்படுத்தி உலகின் உயர் பதவிகளை அடையச் செய்தார் என்பதே உண்மை.

மகிமையில் பிரவேசித்தல்

மேரி ஸ்லெஸர் தன் சுய தேசத்திற்குத் திரும்பிப் போகவில்லை. கடைசி மூச்சு வரை பணி புரிய ஆப்பிரிக்காவிலேயே இருந்து விட்டார்கள். பலவீனம், முதுமை, நோய்வாய்ப்படுதல் போன்ற இவைகள் ஒன்றும் அவர்களின் பணியை தடைசெய்ய முடியவில்லை. நடமாட முடியாத நிலையிலும் படுக்கையில் இருந்தவாறே ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய நினைவுகளெல்லாம் பரலோகத்தைப் பற்றியதாகவே இருந்தது.

மேரி ஸ்லெஸரின் கல்லறை

இறுதியில் 1915-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 13-ம் நாள் பாடி ராஜாவின் சந்நிதியை அடைந்தார்கள். வெகு உண்மையாய் தான் சேவித்த கிறிஸ்துவிடம் பலனையும், கிரீடத்தையும் பெற பரலோகம் சென்றார்கள். அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருந்த பரிசுத்த வேதாகமம் பல போராட்டங்களை ஜெயிக்க உதவியது. அவர்களோடு படுக்கையில் கிடந்த அவ்வேதாகமம் முழுவதும், குறிப்பு எழுதப்பட்டும், கோடுகள் வரையப் பட்டும் காணப்பட்டது .

அவர்களின் உடைமையெல்லாம் உடைகள், புத்தகங்கள், கடிக கட்டுகள் ஆகிய மிக அற்பமான சில பொருள்களே ஆகும். உண்மையாகவே, அநேகரை ஐசுவரியவான்களாக்கும் பொருட்டு, தன்னைத் தரித்திரர் ஆக்கினார்கள். அநேகர் புதுவாழ்வு காண தன்வாழ்வை அர்ப்பணித்தார்கள். ஸ்காட்லாந்து தேசத்து மேரி, பயந்த சுபாவமும், மெலிவான தோற்றமும் உடையவர். கிறிஸ்துவுக்கு மகிமையும், உலக மக்களுக்குப் பயனும் உள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்.

மேரி ஸ்லெஸரின் நினைவாக கட்டப்பட்ட மற்றும் வெளியிடப்பட்டவைகள்

Mary Slessor Memorial Window
The Café, The McManus: Dundee’s Art Gallery & Museum


Clydesdale Bank £10 Note - Front


Clydesdale Bank £10 Note - Back


Granite Memorial
Unveiled 13 February 2015, Steeple Church, Dundee

மேலான பரலோக பாக்கியம் பெற தன் நேசர் இயேசுவுக்கு எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிதலுள்ள வரானார். உன்னுடைய வாழ்க்கையும் அநேகருக்கு ஆசீர்வாதமும், பயனும் உள்ளதாக மாறும். உன்னுடைய பலவீனங்கள், பிரயாசைகள், தாலந்துகளெல்லாம் பரம இராஜாவின் அழைப்பிற்கும், ஆதீனத்திற்கும் அர்ப்பணிக்கப்படுமானால், எத்தனை மாறுதல்கள் நிகழும். மக்களில், சமுதாயத்தில், திருச்சபையில் வியக்கத்தகும் மாற்றங்களை உன்னால் ஏற்படுத்த முடியும். கிறிஸ்துவின் அன்பின் அழைப்பை இன்றே ஏற்பாயோ? கீழ்ப்படிவாயோ? ஆம் கிறிஸ்து உன்னை ஒப்பற்ற ஆசீர்வாதமாக மாற்றுவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்