-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நுகம் - தமிழ் கிறிஸ்தவ கதை


ஆடு மேய்ப்பவர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. தினமும் அவைகளைப் புல்வெளிகளில் மேயவிட்டு, நீர் நிலைகளில் தண்ணீர் பருகச் செய்து, மாலை வேலைகளில் தொழுவத்தில் பாதுகாப்பாக அடைத்து வைப்பார் .

அவர் முன்னே நடக்க ஆடுகள் எல்லாம் அவர் பின்னே நடக்கும் . அவரின் சத்தம் கேட்கும் எல்லைக்குள்ளாகவே அவை மேய்ந்து கொண்டிருக்கும் .அவரிடம் இருந்த ஒரு ஆட்டுக்கு இந்த வழக்கங்கள் சலித்துப் போக ஆரம்பித்தன. காட்டில் எவ்வளவோ புல்வெளிகள் இருந்தும் அவர் காட்டும் புல்வெளியில்தான் மேய வேண்டியிருந்தது. எவ்வளவோ நீர்நிலைகள் இருந்தும் அவர் காட்டும் நீர்நிலையில்தான் பருக வேண்டியிருந்தது. சில நேரங்களில் பசியோடும் , தாகத்தோடும் கூட , அவர் மேய்ச்சலுக்கு இடம் காட்டும் வரை அவர் பின்னாலேயே நடந்து போகவேண்டும் .

அந்த ஆடு நினைத்தது , ” எவ்வளவோ அருமையான நீர்நிலைகளும், பசும் புல்வெளிகளும், மாலையில் தங்கிக்கொள்ள நல்ல மறைவிடங்களும் இருக்கும் இந்த செழிப்பான காட்டில் நாம் ஏன் அடிமை போலக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். நினைக்கும் போதெல்லாம் தண்ணீர். பசி வந்த உடனே மேய்ச்சல். இதுதான் இனி நம் கொள்கை. மற்ற முட்டாள் ஆடுகள் வேண்டுமென்றால் அடிமை வாழ்வு வாழ்ந்து கொள்ளட்டும் ” .ஆட்டின் சிந்தனை அதைத் தூங்கவிடவில்லை. மறுநாளே அதன் திட்டத்தை செயல்படுத்தியது. மறுநாள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மெதுவாக ஒவ்வொரு அடியாய்ப் பின்வாங்கியது . இப்படியே முழு மந்தையும் முன்னே செல்ல விட்டுவிட்டு ஒரு மரத்தின் பின்பாகப் பதுங்கிக் கொண்டது. ஆடுகளெல்லாம் கடந்து மறையும் வரை காத்திருந்துவிட்டு சந்தோஷமாய் வெளியே வந்தது.

” மேய்ப்பரின் அடக்குமுறையில்லை , உண்ணவும் பருகவும் கட்டுப்பாடில்லை , கூட்டத்தோடு கூட்டமாய் அடைபட்டிருக்கத் தேவையில்லை . எப்போதும் எதையும் செய்யலாம் . விடுதலை விடுதலை ” ஆடு உற்சாகமாய்ப் பாடியது . எங்கெங்கோ ஓடியது. குதித்தது. எல்லையில்லாத உற்சாகத்தில் மிதந்தது .

கொஞ்ச தூரத்தில் உயரமான புற்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்த ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தது. அந்தப்புற்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. இதுவரை மேய்ப்பன் ஒரு முறை கூட அதில் மேயவிட்டதே இல்லை .

ஆசையாய் ஓடி மேய ஆரம்பித்தது . புதிய புல்லின் சுவையில் அது மெய்மறந்து மேய்ந்து கொண்டிருக்கும்போது தீடீரென்று புற்களின் மறைவிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட்டு ஆட்டின் மேல் பாய்ந்து அதன் முதுகுப் பக்கத்தை அழுத்தமாய்க் கவ்வியது. இதுபோன்ற ஆபத்தை இதுவரை ஆடு சந்தித்ததேயில்லை. வலியிலும் , மரண பயத்திலும் ஆடு அலறித்துடித்து , ஓநாயின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது .

அப்போது எதிர்பாராத விதமாய் ஒரு மலைப்பாம்பு , புற்களிலிருந்து வெளிப்பட்டு ஓநாயை இறுக்கிக் கொண்டது . அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி . ஓநாய் தன்னுடைய மரணப் போராட்டத்தில் ஆட்டை விட்டுவிட்டது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆடு அந்த இடம் விட்டு ஓடிப்போனது .

முதுகில் பலமாய்க் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. சொல்ல முடியாத அளவு வலி. தொண்டை வறண்டு போனது. தண்ணீர் எங்கேயாவது கிடைக்குமா என்று அதன் கண்கள் தேடின . தூரத்தில் ஒரு ஓடை தென்பட்டது . நடுக்கத்துடனும் ,வலியுடனும் அந்த ஓடையை நோக்கி ஓடியது.

தண்ணீரைப் பார்த்ததும் மனம் கொஞ்சம் அமைதியானது. வேகமாய் நெருங்கி நீரைப் பருக ஆரம்பித்தது. குளிர்ந்த தண்ணீர் தொண்டையில் இறங்குவது என்னவொரு நிம்மதி ? பட்ட துன்பங்களையெல்லாம் கொஞ்சம் மறந்தது. எல்லாமே ஓரிரு நொடிகள் தான் . தண்ணீரிலிருந்து ஒரு முதலை பாய்ந்து வெளிப்பட்டு ஆட்டின் பின்னங் காலைக் கவ்வியது. அதன் கூரிய பற்கள் அழுத்தியதில் காலில் வலியும் , ரத்தமும் பெருக்கெடுத்தன .

"ஐயோ . இங்கும் ஆபத்தா?". ஆடு தன் முழு பலத்தையும் திரட்டிப் போராடியது. இன்னொரு காலை பலமாக உதைத்ததில் அந்த உதை சரியாக முதலையில் கண்ணில் விழுந்தது. முதலை கொஞ்சம் தடுமாறிப் பிடியை விடுவித்தது . தப்பிப் பிழைத்த ஆடு , இரத்தம் சொட்டச் சொட்ட ஓடியது.

” ஒரே நாளில் எத்தனை ஆபத்துகள் ? எஜமானுக்குப் பின் செல்கையில் இதெல்லாம் என்னவென்று கூடத் தெரியாதே! நான் எதை அடிமைத்தனம் என்று நினைத்திருந்தேனோ அதுதான் இதுவரை என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறது . எஜமான் நம்மை இடம் பார்த்து மேய்த்தது இதற்காகத்தான் போலும் ” கதறி அழுதபடி ஓடியது .

எஜமானரை நினைத்துக் கண்ணீர் பெருகியது. ” எஜமான் தம்முடைய கோலால் வேண்டுமானாலும் என்னை நன்றாக அடிக்கட்டும் . நான் இனி அவரை விட்டுப் பிரியவே மாட்டேன் ” என்று எண்ணியபோது , எஜமானின் குரல் அதன் காதில் தேனாய் விழுந்தது. தூரத்தில் அவர் ஆட்டின் கதறலைக் கேட்டு ஓடிவந்து கொண்டிருந்தார்.

” என்னை நல்லா அடிங்க எஜமானே. புத்தி வர்ர வரைக்கும் அடிங்க ” ஆடு மனதுக்குள் புலம்பியது . மேய்ப்பர் அருகில் வந்து விட்டார் . ஆனால் அவரது முகத்தில் கோபமில்லை. கண்களில் கண்ணீர் , ” இப்படி காயம் பட்டு வந்துருக்கியே செல்லம் . இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாதே ” . அவர் வேறு எதுவுமே சொல்லவில்லை . ஆட்டைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார் . அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அதன் நெற்றியில் தெறித்தது.

செல்லமே ,

எவ்வளவோ வழிகளை நாம் நமக்காக உண்டு பண்ணிக் கொள்ளலாம் . அது நம் பார்வைக்கு நலமானதாகவும் தோன்றலாம் . ஆனால் அதன் முடிவு ? அவரது வழிநடத்துதலே இன்பம் . அவர் குரல் கேட்கும் எல்லைக்குள் குடியிருப்பதே ஜீவன். அது நுகமல்ல , சுகம்.

” என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது ” 

மத்தேயு 11 : 30

கருத்துரையிடுக

0 கருத்துகள்